Saturday, May 2, 2009

மக்களாகிய நாம் - நூல் விமர்சனம்







நூலின் பெயர் - மக்களாகிய நாம்

ஆசிரியர் – அ.கி. வேங்கட சுப்ரமணியன்

பதிப்பகம் - கிழக்குப்பதிப்பகம்

முகவரி - எண். 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை,
சென்னை – 18 தொலை பேசி -42009601

விலை - ரூ. 100/-

'' ஏழைகளின் விம்மல் கவனிக்கப்படுவதேயில்லை.
சர்வாதிகாரத்தின் ஒவ்வொர் மட்டத்திலுமுள்ள ஜந்துக்களாலும்
அவர்கள் வதைக்கப்படுகிறார்கள்'' – ஆலிவர் கோல்ட் ஸ்மித்.
சொன்ன வார்த்தை இன்று வரையில் பழுதில்லாமல் பலித்து வருகிறது. பொதுமக்களாகிய நமக்கு கடந்த இடைத்தேர்தலில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஓட்டுப்போட உரிமையுள்ள ஒவ்வோர் குடிமகனும் தலா. ஆயிரத்து ஜந்நூறு வரை மொத்தமாகவொ சில்லரை விலைக்கோ கிடைப்பதாக கூறுகின்றன.

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வரிப்பணத்தில் தமக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளுகிறார்கள். எம்எல்ஏ மற்றும் எம்பி யிடமிருந்து தேசத்தை பாதுகாப்பதே மக்களின் தலையாய பணியாக மாறிவிடுகிறது. இதுதான் நமது குடியாட்சியின் மகத்துவம் அல்லது மகாதத்துவம்.

இந்த அவலத்தை எவ்வாறு எதிர்கொள்வது, பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? நமது சனநாயக கடமைதான் என்ன? என்பதை நாளிதழ் மற்றும் இதர இதழ்களுக்கு எழுதிய கட்டுரை மூலம் ஆசிரியர் அ.கி. வேங்கட சுப்ரமணியன் முன்வைக்கிறார்.

சமூக ஆர்வம் மிளிரும் கட்டுரைகளின் தொகுப்பாக ஒவ்வோர் பக்கமும் வடிக்கப்படுள்ளது. குடியாட்சி, உள்ளாட்சி, கல்வி, வாழ்க்கை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கருத்துகளும் நிச்சயமாக நல்ல சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் அறிவியல் ஆய்வு வடிவில் மிகத்தெளிவானவை. இந்திய துணைக்கண்டத்தில் சனநாயகம் ஒரு கேளிக்கூத்தாக மாறியதன் பரினாமம் பற்றியதானவையாகும்.

'நமது மாகாணத்தில் முழு மதுவிலக்கு அமுலுக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்திற்குப் பதினேழு கோடி ரூபாய் நட்டமும் ஏழை எளியவர்களுக்கு எழுபது கோடி ரூபாய் லாபமும் ஆகிறது. ''
- என்ற ஓமந்தூராரின் எண்ணத்தை பிரதிபளிக்கும் வகையில் மதுவிலக்கு சிந்தனைகள் குறிப்பித்தகுந்தவை.
மற்ற மாநிலங்களை ஒப்பு நோக்கும் போது தமிழகத்தில் அதிகமான விதவைப்பெண்கள் உள்ளனர். அதற்கு மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறையில் இருப்பதுதான் காரணம் என்ற பகிரங்க குற்றச்சாட்டை தமிழக அரசின் மீது இந்நூல் வைக்கிறது. இந்த குற்றாசாட்டிற்கு மறுப்புரையாக தமிழகத்தில் தான் 'விதவைகள் நலவாழ்வு திட்டம் உள்ளதாக கூறுவதை எவராலும் ஏற்க முடியாது எனவும் மறுத்துள்ளார். ஆம் உண்மைதான், மாற்று மருந்து இருப்பதற்காக எப்படி விடத்தை குடிக்க முடியாதோ அது போல தமிழகத்தில் மதுவை ஏற்க முடியாதுதான். இந்த அரசு தண்ணீரை தனியார் மயமாக்கி 'வாட்டர் வாரியத்தை தனியாருக்கு கொடுத்து, குவாட்டர் வாரியத்தை தாமே (அரசே) நடத்தி மக்களை பார்த்து எகத்தாளம் செய்கிறது.

புத்தகத்தை பிரித்து படித்தபோது சில பக்கத்தில் நம்ப முடியாத, ஆனால் உண்மையாக தகவலை அறிய முடிந்தது. சுதந்திரம் பெற்று பொன்விழா கண்ட பின்பும் 2006 ல் வரப்பெற்ற காவல் துறையின் நிபந்தணைகளுடன் கூடிய பொதுக்கூட்ட அனுமதி (?) வெளியிட்டுள்ளது. அதில் குடிமக்களாகிய நாமது சுதந்திரத்தின் விளிம்பு என்ன என்பது விளங்குகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இல்லாத ஒடுக்கு முறை கூட தற்போது நம்மீது ஏவப்படுவது புலனாகிறது.

மற்றொரு செய்தி 'சேது சமுத்திர திட்டம் குரித்தானது. திட்டத்தினால் பலனடையும் பெரிய கப்பல் நிறுவனத்திற்கு கூட எவ்வளவு லாபம் என தெரியாது என கூறியிருப்பது. அ.கி. வேங்கட சுப்பிர மணியனின் கூரிய ஆய்தறியும் பார்வை பாராட்டத்தக்கது.


உலக நாடுகள் மத்தியில் ஒபமா பெருமிதமாக கையசைக்கிறார். பெருமித்தின் நிழலின் சாரத்தில் மண்டேலாவின் 27 ஆண்டுகாலங்கள் கடந்த சிறையனுபவத்தை தரிசிக்க முடிகிறது. சனநாயக உரிமையை சொல்லும் போது வரலாற்றில் நீங்கத இடம் மண்டேலாவுக்கு உள்ளது. அதனால்தான் தமது நூலில் கருப்பினத்தலைவனின் வாழ்க்கை பாடத்தை சேர்த்திருப்பது மிக பொருத்தமானது.

உள்ளாட்சித்தேர்தலில் வன்முறை தலைவிரித்தாடியதை கட்டுரைகள் அம்பலபடுத்துகிறது. நீதி மன்றத்தால் சனநாயப்படுகொலை புரிந்தவரை அடையாளம் காட்டினால் கூட தண்டிப்பதற்கான வழிவகை சட்டத்தில் இல்லை என்பதை உணரமுடிகிறது.

கல்விக்கென பெறுகிற நிதி கல்விக்காக செலவிடப்படுவதில்லை என்கிற ஆதங்கத்தை மிகத்துல்லியமாக ஆதாரங்களோடு தருகிறது. ஆரம்பக்கல்வியின் அடிப்படை தேவை கூட நிறைவேற்றப்படாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அதற்கு மாற்றாக போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் மனோநிலை சரியானதே என ஒப்புக்கொள்ளுகிறார் ஆசிரியர். ஆனால் உரிமைகளை மீட்டெடுக்க மக்களின் ஒன்றிணைந்த போராட்டமே கடைசி ஆயுதம் என்பதை நூல் ஆசிரியர் நியாயப்படுத்துவதில் பட்டும் படாமல் விலகுவதையும் காணமுடிகிறது.


கேரளத்தில் ஐந்து மணிநேரம் தாமதமாக வந்த மருத்துவரை எதிர்த்து சாலை மறியல் போன்றவை நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தால் சாதிக்க இயலாத போக்கினை பல இடங்களில் போராட்டம் சாதித்துள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் தமிழகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மக்களே காரணம் சொல்லி சமாதானம் கற்பிப்பார்கள். தமிழகத்திலும் விழிப்புணர்வு மிகுந்த போராட்டங்கள் நடைபெறுமானால் மக்களாட்சி மாண்புகள் காப்பாற்றபடும் வாய்புள்ளது.

ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது போல ஒரே கருத்தை சொல்லும் செய்திகள் திரும்பத்திரும்ப இடம் பெறுவது படிக்கும் போது சலிப்பை தருகிறது. மக்களாட்சியின் மகத்துவத்தை முன்வைக்கும் ஆசிரியரின் கருத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

சுதந்திர இந்தியாவில் மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை என்பதை சுதந்திரமாக சொல்லும் நூல் ' மக்களாகிய நாம் '

- சென்னைத்தமிழன்.

Sunday, November 16, 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்


நூலின் பெயர் - சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

ஆசிரியர் - யுவகிருஷ்ணா

பதிப்பகம் - கிழக்குப்பதிப்பகம்

விலை - ரூ. 70/-

விமர்சனம்

இந்தியாவில் என்ன கிடைக்கும்?
வெளிநாட்டுப்பொருட்களெல்லாம் கிடைக்கும்.

வெளிநாடுகளில் என்ன கிடைக்கும்?
இந்தியாவே கிடைக்கும்.

என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நடைபெற்றுவரும் யுத்தம் வியாபார யுத்தமாகும். அதில் நீங்கள் கலந்து கொண்டாலும் இல்லையென்றாலும் பாதிப்புக்குட்படுவதை தவிற்க முடியாது.

நுகர்வு கலாச்சாரம் பெருகிவரும் வேளையில் விளம்பரம் இல்லாத உலகை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எங்கு காணினும் விளம்பரத்தின் பிரம்மாண்டம் நம்முன்னே நின்று அசத்துகிறது.

'நேர்மை என்றால் அமாம் என்றும், இதயத்திற்கு இதமானது என்றால் இதயம் நல்லெண்ணெய் எனவும், 'எனர்ஜி' என்றாலே பூஸ்ட் என்றும் படிமங்களாக நம் மனதில் படிந்துவிட்டன.

'சரக்கு முடுக்கா? செட்டியார் முடுக்கா ? என்ற பழமொழி கூட அவ்வாறே வழக்கில் வந்திருக்கும் என கருதுகிறேன்.

1992 புதிய பொருளாதாரக் கொள்(ளை)கை யினால், ஆள்வோர்களின் புண்ணியாத்தில் திருநெல்வேலி அண்ணாச்சியும், வால்மார்ட்டும் நேரடியாக போட்டிப்போட வைக்கிறார்கள். ஏசியில் விற்கும் ரிலயன்ஸ் பிரஷ் , சாலையோர் தூசியில் விற்கும் நமது மாரிமுத்துவுடன் மல்லுக்கட்டுகிறது. இந்நிலையில் நாம் எடுக்கவேண்டிய ஆயுதம் வியாபார யுத்தியாகும். அந்த வியாபார , விளம்பர வர்த்தகத்தினை பற்றியது இப்புத்தகம்.

இப்புத்தகத்தை வாசிக்கும் போது ஒரு செய்தி என் நினைவுக்கு வருகிறது, இதழியல் துறையில் உள்ளோருக்கு 'இதழாளர் கையேடு' என ஒரு புத்தகம் வெளிவந்தது. அதை தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் ஆதித்தனார் எழுதினார். அப்புத்தகம் இதழியல் துறையில் உள்ள அனைத்து தொழில் இரகசியங்களையும் புட்டு, புட்டு வைத்தது. அதற்கடுத்தபடியாக விளம்பரத்துறையில் உள்ள தொழில் இரசியங்களை இப்புத்தகம் தெள்ளத்தெளிவாக வாசகர்களுக்கு சொல்லுகிறது என்றால் மிகையில்லை.


கிழக்கு பதிப்பகத்திற்கென ஒரு பாணியுண்டு, எப்படிப்பட்ட கடினமான செய்திகளைக்கூட மிக எளிமையாக, சுவரசியமாக ஒரு கதைபோல் எழுதச்சொல்லி நூலை வெளியிடுவார்கள். அந்த வடிவத்தை யுவகிருஷ்ணா காப்பாற்றியிருக்கிறார்.

நுகர்வு கலாச்சாரம் பெருகி பெற்ற தாயினைத்தவிர அனைத்துப்பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. மக்களிடையே வாங்கும் மோகம் அதிகமாகி வருவது ஒரு சமூக நோயாகும். அமெரிக்காவை சேர்ந்த இகென் ப்ளூட்டர் இதை 'ஆனியோ மேனியா' இதை நோய் குறித்து கவலை தெரிவிக்கிறார்.


ஒரு புறம் நுகர்வு கலாச்சாரம் பெருகிவந்தாலும் சிறு வணிகர் முதல் பெரு வியாபாரி வரை தமது பொருளை விளம்பரப்படுத்தாமல் களத்தில் நிற்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. எல்லோரும் விளம்பர நிறுவனத்தை நோக்கி வருகிறார்கள். நிறுவனத்தை அவர்கள் தேடிவந்த பிறகு வனிகர்கள் எத்தகைய மாற்றத்தை அடைகிறார்கள், அதற்காக விளம்பர நிறுவனங்கள் எவ்வாறு உழைக்கிறார்கள் குரித்தான பல யோசனைகளை யுவகிருஷ்ணா தெளிவாக்குகிறார்.

விளம்பரம் ஏன் செய்யவேண்டும்?, விளம்பரத்திற்கு பின்னே இருக்கும் மாபெரும் தொழில் உலகம் எப்படியிருக்கிறது? இன்றய தலைமுறை எப்படி தமது வேலைவாய்ப்பை பெருக்கிக்கொள்ள முடியும், எவை செய்ய வேண்டியவை, எவை தவிற்க வேண்டியவை என்பதை உற்ற தோழன்போல் நம்முடன் இருந்து இப்புத்தகம் சொல்லுகிறது.


முதல் 30 பக்கங்கள் புத்தகம் ஒரு டாகுமென்டிரி போல் ஆரம்பித்தாலும், போகப்போக சுவாரசியம் கூடுகிறது. படிக்கும்போது எங்குமே சுணக்கம் ஏற்படவில்லை. உண்மையில் இப்புத்தகம் படித்தற்கு பின்னர்தான், விளம்பர உலகின் பிரம்மாண்டம் குறித்தும், 20 வினாடிக்குள்ளாக எப்படி இவ்வளவு சிறப்பாக ஒரு திரை விளம்பரம் இப்படி அழகியலோடு வடிவமைக்கப்படுகிறது என்பது விளங்குகிறது. ஒவ்வோர் நொடிக்கான அருமையினை விளம்பரத்துறையில் உள்ளவர்களால் முற்றிலுமாக உணரமுடிகிறது.


நேர்த்தியாக விளம்பரம் செய்து தவறான வாக்குறுதிகளை அள்ளித்தரும் விளம்பரங்கள் மீது நுகர்வோர்கள் எவ்வகையான அனுகுமுறைகளை மேற்கொண்டார்கள், விளம்பர நிறுவனங்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டார்கள்கள் என்ற விவரம் அளித்திருந்தால் எல்லா தரப்பு வாசகர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

புத்தகத்தில் ' பாட்டா' நிறுவனம் வர்த்தக விளம்பரம் இல்லாமல் கொடிகட்டி பறப்பது, 'ஜெராக்ஸ்' நிறுவனத்தின் பெயர்தான் ஒளிநகலுக்கு பெயரிடப்பட்டது. என ஏராளமான சுவாரசியம் மிகுந்த தகவல்கள் நிறைந்துள்ளன. மேலும் 'டெட்டால் , வாசிலைன் ஆகியவை தொழில் நுட்ப பெயர்களா இல்லை நிறுவனத்தின் பெயரா என்பதை கூட இப்புத்தகத்தில் விவாதித்திருக்கலாம்.


பொதுவில் விளம்பரமென்பது தவிற்க முடியாத காரணியாகவும் , வளர்ந்து வரும் விளம்பர உலகின் வாசல்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கிறது என்ற தாமறிந்த உண்மையை உலகத்திற்கு தெரிவிக்கிறார் யுவகிருஷ்ணா. மார்கெட்டிங், முகவர், விற்பணை பிரமுகர் என பலதரப்பட்ட இளைஞர்களும் வாங்கிப்படிக்காலாம் என்பதைவிடவும் பயனடையலாம் என்பது திண்ணம்.


- சென்னைத்தமிழன்

தமிழ்நாட்டின் வயித்தெரிச்சலே வருக..... வருக.......



தமிழகத்தில் ஒரு தொற்று நோய் பெருகி வருகிறது. கட்சித்தலைவர் பிறந்த நாள், செத்துப்போன தலைவரின் நினைவுநாள், பெண் தொப்புளில் ஆம்லட் போடும் நடிகனின் பிறந்த நாள் என சினிமா ரிலீஸ் முதல் மஞ்சத்தண்ணியூத்து, காதுகுத்து, கருமாதி உட்பட தமிழன் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாக டிஜிடல் பேனர் ஒன்றிவிட்டது.

நேற்று கட்சி ஆரம்பித்தவர் உட்பட ஏதோ ஒரு படத்தில் காமெடி ரோல் நடித்தவன் வரை நாளைய முதல்வரே... வருங்கால முதல்வரே.... நாளைய வரலாறே... ஓடும் ஒட்டக்கூத்தரே..... வாந்தியெடுக்கும் வள்ளுவரே.... தமிழகத்தின் வருங்காலமே..... (தமிழகத்தின் இறந்த காலமே என யாரையும் ஏன் போடுவதில்லை என்பது தெரியவில்லை) என்று தொடர்கிறது வாழ்த்துகள்.

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் ' எதுக்குடா இந்த விளம்பரம், சினிமாக்கரங்கதான் அலையானுங்க.... நீயுமா? என்பார். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவருகிறது. சினிமாக்காரர்கள் அரசியல்வாதியாக மாற நினைப்பதும், அரசியல் தலைவர்கள் சினிமா நட்டத்திரங்களாக மாறி விளம்பரம் செய்வதுமாக தொடர்கிறது.

தமிழ் நாட்டில் பட்டத்துக்கு மட்டும் பஞ்சமேயில்லை. அதைவிட பலகலை கழங்களின் வாசலில் ' ஆர்டரின் பேரில் டாக்டர் பட்டம், சில்லரை விலைக்கோ மொத்தமாக கிடைக்கும் என விளம்பர பலகை வைக்காத குறைதான்.

'சோவியத்தில் யுகப்புரட்சி நடந்த்து..... பிரான்ஸில் பிரன்ஞ்சுப்புரட்சி நடந்தது..... சீனாவில் வர்கப்புரட்சி நடந்தது .... ஆப்பிரிக்காவில் இனப்புரட்சி... மேலை நாடுகளில் நவம்பர் புரட்சி .... பசுமை புரட்சி ஆகிய புரட்சிகள் நடந்தன. ஆனால் மேற்படி புரட்சிகள் நடந்த, எந்த தேசத்திலும் புரட்சிகலைஞர், புரட்சித்தலைவர், புரட்சிதலைவி... புரட்சித்தளபதி, புரட்சி நாயகன் என்ற பட்டப்பெயர் ஏதுமில்லை. (புரட்சி என்று இதை எழுதும் போது கூட புரட்சி என்னும் சொல்லை பலாத்காரம் செய்வது போல் உள்ளது) ஆனால் புரட்சியே எட்டிப்பார்காத தமிழகத்தில்தான் எல்லா புரட்சி கழிசடைகளும் உள்ளன. (ர்- போட்டால் உயர்தினையாகிவிடும்).

நாலு வார்த்தைக்கு மேல் நம்மிடம் இல்லாத பண்புகளை சொன்னால் நல்லதோ, கெட்டதோ நம்மால் பொறுக்க முடிவதில்லை. ஆனால் தம்மைப்பற்றி புகழப்புகழ தமிழத்தின் தூண்கள் (அசையாமல் இருப்பதால்) தலைக்கனம் ஏறி கிறுகிறுத்துப் புலங்காதிதம் அடைகின்றனர். சாமியாரிடம் மண்டியிடும் அரசியல் தலைவர் கூட சே குவரா உடன் இணைத்து படம் போட்டுக்கொள்ளுகிறார்கள். அமெரிக்க உளவுத்துறைகூட இப்படி சே' வை அவமானப்படுத்திருக்க முடியாது என்பதே மக்கள் கருத்து.

பழுத்த தலைவர்கள் வீட்டை விட்டு நகர்ந்தாலே பக்கத்தில் உள்ள நகர செயலாளர் பரபரப்பாகிவிடுவார். காலைக்கடன் கழிக்கவரும் கழக கண்மணியே வருக.... சிறுநீர் கழிக்க வரும் சிரோன் மணியே வருக.... வாந்தியெடுக்க வரும வரலாறே வருக... போன்ற வினைல் பேனர்கள் கலை கட்டுகின்றன.

ஏதாவது ஒரு முக்கிய தலைவர் வந்தால் அந்த ஊரின் அமைப்பே மறைந்து வெறும் டிஜிடல் பேனர் மட்டுமே தெரிகிறது. ஊரில் எந்த நிகழச்சியானாலும் வழிகாட்டிப்பலகை, ஊர் விவரப்பலகை ஆகியவை கண்ணீர் அஞ்சலி போஸ்டருகாக அழுகொண்டிருக்கிறது.

ஒரு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தோழர். நல்லக்கண்ணு அவர்கள் தஞ்சையில் ஒரு பிரச்சாரக்கூட்டத்திற்கு போயிருந்தார். அப்போது அக்கட்சியினர் கூட்டத்திற்கான சுவரொட்டியில் தோழர். நல்லக்கண்ணுவின் படத்தையும் சேர்த்து அச்சிட்டு வெளியிட்டிருந்தனர். தம்முடைய படம் பிரசுரமானதைக்கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். தோழர். தமது அணியினரை கண்டித்ததுடன் ' நமது கட்சியில் தனிமனித முன்னிறுத்தலோ, விளம்பரமோ கூடாது, கொள்கையைத்தான் முன்னிறுத்த வேண்டும் என எச்சரித்தார். அந்த கட்சிக்கூட்டதை புறக்கணித்து விட்டு அடுத்த பேருந்து ஏறி அலுவலகத்திற்கு திரும்பிவிட்டார். இது போன்ற தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இல்லை, இல்லை நகர, பேரூர், கிளை செயலாளர்களி பேனர் வைப்பது அல்லது செலவு செய்வதை விரும்புகிறார்ளென்றால், முதல்வர், அமைச்சர், மாவட்ட செயலாளர் அல்லது கட்சித்தலைமைகளே கூட தமது தொண்டர்களுக்கு கட்டளையிடலாம். பேனருக்கு செய்யும் செலவுகளை ஆக்கப்பூர்வமாக செய்ய பல வழிகள் உள்ளன.

மின் விசிறி இல்லாத அரசு தொடக்கப்பள்ளிகள், ஒரு குண்டு பல்புகூட இல்லாத உயர்நிலைப்பள்ளிகள், கொடிக்கம்பம் கூட நட்டுவைக்க வழியில்லாத நடுநிலைப்பள்ளி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதியில்லாத அங்கன்வாடி (பால்வாடி) என நாட்டில் பல அவலங்கள் உண்டு. விளம்பர விரும்பிகள் விருப்பட்டால் மேற்படி உதவிகள் செய்யலாம். வேண்டுமெனில் அதில் அவர்களின் பெயர் எழுதிக்கொள்ளட்டும். (அதற்காக தேசியக்கொடிக்கு தங்கள் கட்சி வண்ணத்தை பூசச்சொல்லவில்லை). சாதாரணமாக ஒரு பேனர் அமைப்பதற்கு (சென்னையில் ) ரூ. 1000 முதல் ரூ. 50000 வரை செலவு செய்ய கரைவேட்டிகள் ஆயத்தமாக இருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் பயன்பாட்டிற்கோ, அரசு சார் நிறுவனத்தற்கு திருப்பிவிட்டால் மக்களுக்கும் அரசியல் தலைவருக்குமான நெருக்கம் ஏற்படும். டிஜிடல் பேனரில் செல்போனில் பேசும் ஜந்து மனிதன்தான் என்ற நம்பிக்கை ஏற்படும்.

-சென்னைத்தமிழன்
04.01.2009

ஊட்ல சொல்லீட்டு வந்துட்டியா?



அலுவலக வேலை நிமித்தமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம் சென்று கொண்டிருக்கிறேன். நகரத்திலிருந்து கிராமத்து பயணங்கள் இதயத்தை மெதுவாக வருடிக்கொடுக்கின்றன என்ற போதிலும் வயல் வெளியாக, ஏரியாக பார்த்தவையெல்லாம் வெள்ளை, வெள்ளையான கற்களால் அளவு குறிக்கப்பட்டு மனைகளாக பரிமளிக்கின்றன. ஒவ்வோர் எல்லைக்கல்லும் விவசாயத்திற்கு வைக்கப்பட்ட சமாதி கற்களாகவே தெரிகிறது. . தீடிரென (சுராசிக் பார்க்கில் டைனோசரஸ் வருவது மாதிரி).ஒரு சத்தம். நான் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தை கடந்து பெரும் சத்ததுடன் கடந்து சென்றது. ஒரு அச்சத்தோடு நிமிர்ந்து பார்த்தேன்.

புத்தகத்தில் மூழ்கியிருந்த என்னை மரணம் விசாரித்து விட்டுப்போனதை அருகில் இருந்த பெரியவர் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். 'மணல் லாரி, தம்பி, அப்படித்தான் பேய்மாதிரி ஓட்டுவானுங்க... இதெல்லாம் சகஜம்பா' என கவுண்டமணி பாணியில் சொல்லிவிட்டு அமைதியானார்.

எதிரே எமன் போல் வரும் மணல் லாரிகளை கவனித்தேன். ஒவ்வோர் லாரிக்கும் சாபுத்திரிகா லட்சணத்தில் ஏதோ ஓர் குறையிருப்பதாக தெரிந்த்து. பம்பர் இல்லாத லாரி, முகப்பு விளக்கு இல்லாதவை, இன்டிகேட்டர் இல்லாமல், கண்ணாடி இல்லாமல் . சில நேரத்தில் டிரைவரே இல்லாமல் (அதாம்பா கிளினர்), யாரையோ இடித்ததற்கான வரலாற்று தடையத்தோடு விழுப்புண் பதிந்தவையாக விரைந்து கொண்டிருக்கின்றன.

புறநானூற்று காலத்தில் விழுப்புண்ணுடன் வரும் மகனுக்கு வரவேற்பு தரும் தாய் போல லாரி உரிமையாளர்கள் தமது நீர் சொட்ட சொட்ட வரும் மணலுக்காக நாக்கு சொட்ட, சொட்ட காத்து கொண்டிருக்கிறார்கள். மணல் திருட்டை தடுக்க முனையும் மனசாட்சியுள்ள தாசில்தாருக்கு மனசாட்சியின்றி சிவலோகப்பதவி வழங்கிவிட்டு வீடு திரும்புகிறது எஜமானர்களுக்கு கட்டுபட்ட மணல் லாரி. ஒரு சின்ன வழக்கு, காவல் நிலைய அபராதம், ஓட்டுனரிடம் ஒரு ஸ்டேட்மென்ட் என மாமூல் வாழ்க்கை பாதிக்காமல் மணல் ஊரு வந்து சேருகிறது.

ஒரு டிரைவரிடம் விசாரித்ததில், ஆங்காங்கே சாலையில் நிற்கும் மணல் உரிமையாளர் பிரதிநிதிகள் எங்கெங்கே சோதனைச்சாவடி உள்ளதென்றும், எங்கே வாகன தணிக்கை செய்கிறார்கள் என்றும் செல்போனில் டிரைவருக்கு தகவல் சொல்ல, அவர்களும் கிராமத்து குறுக்குச் சாலை வழியே ரூட் மாறுகிறார்கள். கிராமத்திற்கு வரும் லாரி பள்ளிக்குழந்தைகளையும் நரபலி வாங்குகிறது மணல் வியாபாரம்.

1980 களில் அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த கருத்தடை சாதனங்கள் உட்பட பலகோடிகள் செலவு செய்து ஓரளவே சாதித்தது. அதற்கு பதிலாக மாவட்டதிற்கு 100 மணல் லாரிகளை அரசு தமது சொந்த செலவில் வாங்கிவிட்டிருந்தால் மக்கள் தொகை பாதியாக குறைந்திருக்கும் என்பதே உண்மை. 2007ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் நிகழ்ந்த 83,135 விபத்துக்களில், மொத்தம் 59.140 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். லாரிகளால் மட்டும் ஏற்பட்ட விபத்துக்கள் 10,355 அதில் 2851 பேர் உயிரிழப்பும், 1168 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை, அண்ணாசாலையில் கோட்டைத்தாண்டும் நபரிடம் அபராதம் வசூலிக்கும் போலீஸ் , ஹெல்மெட் இல்லாமல் யாராவது வருவார்களா என எதிர்பார்க்கும் போலீஸ், கண்ணை மூடிக்கொண்டு வரும் லாரிகளை பார்க்காமல் ஏன் கண்ணைமூடிக்கொண்டுள்ளனர் என புரியவில்லை. (புரிந்தாலும் சொல்ல முடிவதில்லை).

தாம்பரம் முதல் காஞ்சிபுரம் வரை பார்த்த லாரிகளில் (90 நிமிடபயணத்தில்)
ஹெட்லாம்ப் இல்லாதவை - 32
பம்பர் இல்லாதவை - 11
இன்டிகேட்டர் இல்லாதவை - 53
கண்ணாடி இல்லாதவை - 9
கண்கூசும் கூடுதல் விளக்குடன் உள்ளவை - 14
கரும்புகை கக்கியவை - 13
நெம்பர் பிளேட் அழிந்தவை (அ) மறைந்தவை- 21
' சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?' பாடலைப்போல் மேற்படி குறைகளோடிருந்தும் லாரியின் சீற்றம் மட்டும் குறையவில்லை. மும்பை பயங்கரவாதிகளுக்கும் இவைகளுக்கும் 6 வித்தியாசம் கூட இல்லை.

தூக்கம் கலைந்த இரவுகளில் லைசன்ஸ் இல்லாத கிளினர்களால் ஓட்டிவரப்படும் லாரிகளால் கனவு கலைத்து திடுக்கிட்டு விழித்து சன்னல் வழியே நடுநிசியில் வெறித்துப்பார்கிறேன். ரோடும் வீடும் சலனமற்று கிடக்க நான் மட்டும் கலங்கிப்போயிருக்கிறேன்.
- சென்னைத்தமிழன்.
01.01.09

துப்பு! .. .. .. கெட்ட சமூகம்



காட்சி 1.

பேருந்தில் சில்மிஷம் செய்யும் ஒரு வாலிபனை ஒரு பெண் ' த்தூ.. ஏன்டா நீயெல்லாம் மனுஷனாடா.. அக்கா தங்கச்சிக்கூட பொறக்கல... நீ நல்லா இருப்பியா... கட்டையில போக.. என அவன் முகத்தில் காரி முழிகிறாள்... பேருந்தில் உள்ள பயணிகள் எல்லோரும் அந்த இளைஞனை வெறுப்புணர்வோடு பார்க்கிறார்கள்...

காட்சி 2.

கிரிக்கெட் போட்டி ... ஜாகிர்கான் அந்த மினு மினுப்பான பந்தை, புளிச்.. புளிச் என்று துப்பி மேலும் பளபளக்க வைக்கிறார். ஓடிவந்து உற்சாகமாக வீசுகிறார்... ஆஸ்ரேலிய வீரர் ரிக்கி பான்டிங் மிடில் ஸ்டம்ப் எகிர்கிறது. ஸ்டேடியமே எழுந்து நின்று ஜாகிர்கானை கைத்தட்டி ஆர்பரிக்கிறது.

காட்சி 3

ஒரு திரைப்படம்... கார் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. ரஜினி ஸ்டைலாக தலையைக்கோதிவிட்டு, மென்றுகொண்டிருந்த அந்த பான்பராக் எச்சிலை ஜன்னல் வழியாக துப்பாமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கார்கதவை திறந்து சாலையால் துப்புகிறார். ரஜினி ஸ்டைலில் புல்லரித்துப்போன இரசிகர் கூட்டத்தால் தியேட்டர் அதிர்கிறது.

மூன்றுக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் கேட்கலாம். மேலே துப்பும் எல்லொருக்கும் வெகுஜன அங்கிகாரம் கிடைக்கிறது. உலகில் வேறு எங்கும் மற்றவர் மானம்கெட்டவர் என்பதற்காக காரி உமிழும் பழக்கம் இல்லை. மாறாக அபராதம் கட்டக்கூடிய சூழல் எழுகிறது. ஆனால் நாம் வாழ்வது விசித்திரமான சமூகம்.

எச்சில் துப்பும் பழக்கம் ஒரு நோய்போல் பரவிவருகிறது. நின்று கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் ஓரமாக நடந்து செல்ல இஷ்ட தெய்வத்தின் அருளோ அல்லது குறைத்தபட்சம் ஒரு குடையோ உங்களுக்கு தேவைப்படலாம். தமது வீட்டைத்தவிர பொது இடத்தை கழிப்பிடமாக உபயோகிக்கும் மனோபாவம் நம்மிடையே வளர்ந்துவருகிறது. இது எவ்வளவு அருவேறுப்பானது என நீங்கள் உணரவேண்டுமானால் செருப்பில்லாமல் ஒரு நாள் மட்டும் தெருவில் நடந்து பாருங்கள் தெரியும்.


கடற்பகுதியில் சர்வ தேச எல்லையில் எச்சில் துப்புவர்களுக்கு ரூ.500 வரை, தண்டம் விதிக்கப்படுகிறது. சென்னை மாநராட்சி கூட பொது இடத்தில் துப்புவர்களுக்கு ரூ. 100 தண்டம் விதித்துள்ளது. (வசூல் செய்திருந்தால் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் கையேந்தும் சூழல் வந்திருக்காது). தமிழக அரசு பான்பராக், புகையிலை, பான் பீடா ஆகியவற்றிக்கு தடை விதித்துள்ளது. (ஆமாங்க உண்மைதான், சத்தியமா நம்புங்க..) ரூ.3க்கு விலையிடப்பட்ட பாக்கட்டுகள் உள்ளூர் வரி (போலிஸ் மாமுல்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன்) 6 ரூபாய்க்கு அரசு அங்கிகாரம் பெற்ற, பெறாத அனைத்துக்கடைகளிலும கிடைக்கிறது. கொடுமைகண்டால் கொதித்து சிவப்பாக வேண்டிய சமூகம் பான்பராக் எச்சிலால் சிவந்து கிடக்கிறது.

ஆந்திர மாநிலம் பான் பொருட்களுக்கு தடையேதும் விதிக்கவில்லை. ஆனால் நக்சல் இயக்கம் வேரூன்றியிருக்கும் இடங்களில் பான் பொருட்கள் கடைகளில் கிடைப்பதில்லை. அதிசயம்தான். ஆனால் அக்மார்க் உண்மை. நக்சல் இயக்கங்கள் அங்கே பான் பொருட்களுக்கு தடை விதித்துள்ளன. அரசின் சட்டத்திற்கு கட்டுப்பட மறுப்பவர்கள் நக்சலுக்கு அடங்குகிறார்கள்.

எச்சிலை காலை உணவாக் எடுத்துக்கொள்ளும் ஈ, அதி நவீன நோயின் தீவிர கொள்கை பரப்பு செயலாளராக மாறி காலரா, காசநோய், சிக்குன் குனியா, மலேரியா ஆகியவற்றை எளிதாக பரப்புகிறது. மனித குலத்தின் தவறான செயலால் மனித குலம் அழகிறது.

எச்சில் இலை, எச்சில் உணவு, எச்சில் பையன் என்ற சொல் மூலம் எச்சிலுக்கு இரண்டாம் தரமான இடம்தான் தரப்படுகிறது. உண்மை என்னவேன்றால்... செயற்கை இரத்தம், செயற்கை மணல், செயற்கை இதயம், செயற்கை உறம் என புகுந்து விளையாடும் டெக்னாலஜி உலகம் திகைத்து நிற்பது செயற்கை எச்சில் எப்படி செய்வது என்பது குறித்துதான்.

ஆம், எச்சில் யாராலும் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத அரிய பொருகள். சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், குளோரைடு, பைகார்பனேட், பாஸ்பேட் என கனிமச்சுரங்களின் அதிசயக்கலவை. அதில் உள்ள 'லிப்பேஸ்' செரிமானத்திற்கு உதவுகிறது. நாளொன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் வரை எச்சில் எனப்படும் உமிழ்நீர் வாயில் சுரக்கிறது. எச்சில், உணவுபொருளில் உள்ள நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. ஆற்றல் மிகுந்த பேச்சாற்றல்கூட எச்சிலால்தான் ஏற்ற இறக்கத்தோடு அமைகிறது என்பது மற்றோர் சிறப்புச்செய்தி. அப்படிபட்ட செயற்கரிய பொருளைத்தான் வெளியில் துப்புகிறோம். வெட்கப்படவேண்டிய, வேதனைப்பட வேண்டிய விஷயம்.

இன்று அழுது வீங்கி நாளை சாகப்போகிற சமூகத்திடம், அடுத்து வரப்போகிற தலைமுறை எனக்கு என்ன விட்டுசெலகிறீர்கள் என கேள்விகேட்கும் நிலை வரும். அப்போது மாசுபடாத பூமி என்ற பதில் இல்லையென்றால் அவர்களும் நம்மை நோக்கி காரி உமிழும் நிலை வரலாம்.

எதை தவிற்க போகிறீர்கள்? துப்பும் பழக்கத்தையா? அடுத்த தலைமுறை கேள்விகளையா?

- சென்னைத்தமிழன். 07.12.08

தமிழகத்திற்கு வரும் கபடமில்லா கர்நாடகக்காரர்கள்

தமிழனுக்கு, பயிர் வாழவும் நீர் கிடையாது, உயிர் வாழவும் நீர் கிடையாது என அடாவடித்தனம் செய்யும் கர்நாடகரர்களைப் பற்றியதல்ல இப்பதிவு. நீரை கொள்ளையடிப்பவர்களை பற்றிப்பேசி நேரத்தை வீணாக்காமல், மனதை கொள்ளையடிப்பவர்களை பற்றி பேசுவோம்.
மனிதனாகட்டும் அல்லது மற்ற உயிரினமாகட்டும் இரம்யமான சூழலுக்கு மனதை கொள்ளைகொடுக்காத உயிரினமே இல்லை. அதுபோல்தான் இரம்யமான சூழக்காகவே தமிழகத்தின் கோவை மாவட்டம், ஆனைக்கட்டிக்கு படையெடுத்து வருகின்றன கர்நாடக பட்டாம்பூச்சிகள். வண்ண வண்ண கோலங்கள் அள்ளி தெளித்தாற்போல், பறக்கும் ஓவியமாக சுற்றி வருகின்றன.

பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் காற்று வரும் திசைக்கு எதிராக பறந்து செல்லும் இயல்பு கொண்டவை. ஜுன், ஜூலையில் நீலகிரி மலைத்தொடர் பகுதியிலும் கர்நாடகப்பகுதியிலும் இருக்கும் இவை தென்மேற்கு திசையிருந்து வடகிழக்காக இடம்பெயர்கிறது. நீலகிரி மலைத்தொடர் பகுதிகளிலிருந்து வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு இன்ப சுற்றுலாவிற்கு கிளம்பிவிடுகின்றன.
இவை தமது வாழ்க்கையை முட்டை, புழு, கூட்டுப்புழு, முழுப்பூச்சிப்பருவம் என நான்கு வகை அவதாரமா எடுக்கின்றன.

அக்டோபர் நவம்பர் மாத்தில் கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு தேன்நிலவிற்காக வருகின்றது. வந்த இடத்தில் ஒரு காமக்களியாட்டமே நடக்கின்றது. பட்டாம் பூச்சிகள் சூரிய உதயத்திற்குப்பின்தான் பறக்க முற்படுகின்றன. அதற்கு முன்னதாக மரத்தின் மேலமர்ந்து சூரிய வெளிச்சத்தில் தன் சிறகுகளை உளர்த்தி சிறகடிக்க பக்குவப்படுத்திக்கொள்கின்றன. பெண் பூச்சிக்கு தேவையான சத்துள்ள தாவர உணவை ஆண்பூச்சி தேர்வு செய்து வழங்கி தமது இணையை வசியப்படுத்துகிறது. பெண் பூச்சியும் தமது தேவையறிந்து சேவகம் செய்யும் ஆணின் ஆசைக்கு உடன்படுகிறது. வந்த வேளையை சிந்தாமல் சிதறாமல் பக்குவமாய் முடிக்கின்றன. பெரும்பாலான ஆண் வண்ணத்துப்பூச்சிகள் புணர்ச்சிக்கு பின்பாக இறந்துவிடுகின்றன.

இவைகள் ஆனைகட்டியை பகுதியை ஏன் தேர்வு செய்கின்றது தெரியுமா?
ஊடல் கொள்ளத்தகுந்த புவியியல் தட்பவெப்பம்,
செரிவு மிகுந்த உணவு,
சூழலில் நிலவும் ஈரப்பதம்,
காற்றின் திசை இவையெல்லாம் அவற்றை தமிழகத்திற்குள் அழைத்துவரச்செய்கின்றன. கூட்டம் கூட்டமாக வகை, வகையாக லடசக்கணக்கில் சுற்றி மகிழ்கின்றன.

இவற்றில் முக்கிய வகைகளான admirals, fritillaries, Monarch, Zebra, painted ladies மற்றும் Sulphur குறிப்பிடும் படியானவையாகும். இதில் மொனார்ச் வகைவகையைச்சார்ந்தவை 4,000 கீ.மி. முதல் 4,800 கி.மீ வரை பறந்து செல்லும் திறன் பெற்றவை.


''ச்சீ என்ன வாழக்கை இது பாடாய் படுத்துகிறது, எதிர்நீச்சல் போடுவதே வாழ்க்கையாகிவிட்டது. மனிதனாக பிறந்ததற்கு பறவையாகவோ, அல்லது பட்டாம்பூச்சியாக பிறந்திருக்க வேண்டுமென அலுத்துக்கொள்ளும் மனிதர்களுக்கு ...
பூந்தோட்டமே தமது வாழ்க்கை எனச்சொல்லும் வண்ணத்துப்பூச்சி கூட காற்றின் திசைக்கு எதிராகப்பறக்கிறது. எதிர்நீச்சல் போட்டு போராட்ட உணர்வோடு வாழ்க்கை வாழ்பவனுக்குத்தான் இந்த பூந்தோட்ட வாழ்க்கை சொந்தம் எனும் உண்மையை மானுட குளத்திற்கு அவை விடுக்கும் செய்தியாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வோர் வண்ணத்துப்பூச்சியும் தமக்குள் பாடுவது எனக்கு நன்றாகவே கேட்கிறது.

' உலகம் பிறந்து எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக... '

-சென்னைத்தமிழன் நாள் 30.11.08

அரிவாள் மூக்கனும் ரியல் எஸ்டேட்காரர்களும்




அறிவியல் வளர்ச்சி ஒருபுறம் உலகத்தை சுருங்க வைத்து விட்டது என்பது உண்மைதான். இருந்தாலும், மனிதாபிமானத்தில் விழுந்த விரிசலை அறிவியலால் ஒருபோதும் அடைக்க முடியாது என்பதும் உண்மைதான். அறிவியலின் அடையாளமாக விளங்கும் செல்போன் மனிதன் கையில் தவழ்ந்தது முதல், வீட்டிற்க்குள் துள்ளித்திரிந்த சிட்டுக்குருவிகளை காணவில்லை. அவை எரிச்சலூட்டும் எலக்ட்ராணிக் அலைவரிசைக்கு பயந்து இடம் பெயர்திருக்கக்கூடும். மனித முகங்கள் இல்லாத இடத்திற்கு தமது முகவரியை மாற்றியமைத்திருக்கும் என நம்ம்பலாம். சென்னை நகரினை விட்டு வெளியேறிய பறவையை அறிந்தோம் சென்னைக்கு வரும் பறவைகளைப்பற்றி தெரியுமா?.... அதைப்பற்றி சிறு பதிவு....

பொதுவாக புவியியல் நிலப்பரப்பில் 'கைவேலி' என்ற பகுதி உண்டு. 'கைவேலி என்பது வேறொன்றும் இல்லை, நிலப்பரப்பில் மிகை நீரானது கடலோர பரப்பை அடைந்து பின்னர் கடலில் கலக்கும் வெள்ள நீர்த்தாங்கும் நிலப்பரப்பு ஆகும். அவ்வாறு கைவேலியின் ஒரு பகுதிதான் சென்னை மாநரினை ஒட்டியுள்ள பள்ளிக்கரனை சதுப்பு நிலப்பகுதியாகும்.

இப்பகுதி அரிய உயிரினங்களின் சூழியல் சொர்கம், அறிவியலாளர்கள் கணக்குப்படி 337 விலங்கினங்கள், 114 வகை தாவரங்கள், 115 வகை பறவைகள், 46 வகை மீன்கள், 21 வகை ஊர்வன, 10 வகை பாலூட்டிகள், 9வகை நத்தைகள், 5 வகை நண்டு, 7 வகை வண்ணத்துப்பூச்சி ஆகியன வாழ்கின்றன. ஆர்டிக் பகுதியில் வாழக்கூடிய ரஃப் அன்ட் ரீவ் பறவைகள் முதல் கூழைக்கடா, பவளக்காலி, வாலாட்டி, நீர்க்கோழி ஆகிய சைபீரியப்பறவைகளும் மழைக்காலத்தில் தங்களுக்கு கிடைக்கும் உணவின் மூலமாக சக்தியினை பெற்று தங்கள் சொந்த நாட்டிற்குச்சென்று இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்வாறு பல்லுயிர்களின் சொர்கமாக வாழும் வெள்ள நீர்த்தாங்கும் பரப்பு 5000 ஹெக்டெர் ஒதுக்கப்பட்டவை தற்போது, மாநராட்சி மற்றும் ரியல் எஸ்டேட் காரர்கள் கூட்டு முயற்சியில் 420 ஹெக்டேராக குறைந்துவிட்டது. அரிவாள் மூக்கனுக்கு சதுப்பு நிலத்தின் அருமை தெரிந்த அளவிற்கு நமக்கு தெரியவில்லை.

முதலாவதாக தகவல் தொழில் நுட்ப பூங்காவின் மிக உயர்ந்த கட்டிடங்கள் கைவேலி நிலத்தில் அடைத்துக்கொண்டன. அல்லது அரசின் அனுமதியோடு ஆகிரமித்துக்கொண்டன. அடுத்ததாக தகவல் தொழில் நுட்ப கட்டிடங்களைவிட உயரமான குப்பைமேடும் சென்னை மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கும் குப்பை மக்கா குப்பை அட்டைகள் மட்டும் பள்ளிக்குழந்தைகளின் கையில் கொடுத்துவிட்டு மாநகராட்சியின் மொத்த குப்பையும் பெருங்குடிக்கு செய்கூலி சேதாரமின்றி கொட்டுகின்றன.
இறுதியாக கருப்பு பணத்தின் முதன்மை தொழிலாக கருதப்படும் ரியல் எஸ்டேட் தொழில். இந்த கைவேலிப்பகுதியில் ஒரு கிரவுன்ட் விலை 50 இலட்சத்திற்கும் மேல் விலைபோகிறது. பழைய மாகாபலிபுரம் சாலை தவிர ரியல் எஸ்டேட் காரர்கள் புண்ணியத்தில் அனைத்து இடங்களும் விலைபேசி விற்கப்பட்டுவிட்டது.

பன்னாட்டு குப்பைகளான தொழில் நுட்ப பூங்காக்களும், நம்நாட்டு குப்பைகளும், அழுக்கு அரசியல்வாதியான ஒரு அவதாரமான ரியல் எஸ்டேட் குப்பைகளும் சேர்ந்து அரிய உயரினங்களுக்கும், மனித சமுதாயத்திற்கும் சமாதி கட்டும் பணி நடைபெறுவதாக நாம் அறிகிறோம். சூழியல் காக்க தேவை ஒரு இயக்கம்.